முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.
விடுதலைப் போராட்ட வீரர், மாணவர் தலைவர், தொழிற் சங்கவாதி, பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட ஆளுமையாகத் தோழர் சங்கரய்யா திகழ்ந்தார். விடு தலைக்கு முன்பு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திலும் விடுதலைக்குப் பிறகு மக்கள் நலனுக்காக நடைபெற்ற போராட்டங்களிலும் பங்கு கொண்டு கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்.
சுயநலமறுப்பும் பொதுநலப் பொறுப்பும் கொண்ட தோழர் சங்கரய்யா 8 ஆண்டு சிறைவாழ்வு 5 ஆண்டு தலைமறைவு வாழ்வு ஆகியவற்றை இன்முகத்தோடு ஏற்றவர்.
1941 பிப்ரவரி 28 அன்று ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் மாணவர் தலைவராகக் கலந்து கொண்டவர் சங்கரய்யா. இறுதித் தேர்வுக்கு 15 நாட்கள் இருந்த நிலையில், சங்கரய்யா கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு மாற்றப் பட்டதால் அவரால் பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை.
இதைக் கவனத்தில் கொண்டுதான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றம் தோழர் சங்கரய்யா அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க முன் வந்தது. ஆனால் தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் சர்வாதிகாரமாகச் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஓப்புதல் அளிக்க மறுத்தது ஒரு பெரும் துரோகமாகும்.
திமுக அரசு நிறுவிய தகைசால் தமிழர் விருது முதன் முதலாக தோழர் சங்கரய்யா அவர்களுக்கு வழங்கப்பட்டது பாராட்டிற்குரியது.
தோழர் சங்கரய்யா மரணம் இடதுசாரிகளுக்கு மட்டு மின்றி அனைத்துத் தமிழக மக்களுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் இயக்கத்தினர் மற்றும் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
எம்.எச். ஜவாஹிருல்லா,
தலைவர்- மனிதநேய மக்கள் கட்சி